இலவசப் பொருட்களும், விலையில்லா பொருட்களும்: திராவிட கட்சிகளின் விநியோகம்!
பெயர் மாறி முதலமைச்சர் மாறினாலும் கொடுக்கப்படும் பொருட்கள் கொடுக்கப் படுகின்றன: டிவி இலவசம், மிக்சி-கிரைண்டர் இலவசம், வேட்டி-சேலை இலவசம் என்று கொடுக்க ஆரம்பித்து, விமர்சனத்திற்குள்ளாகியதும், இப்பொழுது பெயரை மாற்றி, “விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம்” என்று அதே இலவசபாணியில் விநியோகம் தொடர்கிறது. பெயர் மட்டும் மாறவில்லை, முதலமைச்சர் படமும் மாறியிருக்கிறது. ஜெயலலிதாவிற்கு நிறைய செனல்கள் / டிவிக்கள் இல்லாததால், கருணாநிதி போன்று காண்பிக்கப் படவில்லை. அரசு வேண்டுமானால், விலையில்லாமல் ஓசியில் கொடுக்கலாம், அரசிற்கு, யாரும் ஓசியில் கொடுப்பதில்லையே? 256 / 300 கோடிகள் கொடுத்தால் தானே கிடைக்கிறது. பிறகு எப்படி அவை “விலையில்லா பொருட்கள்” என்றாகும்? தினமணி, “இலவச வேட்டி, சேலைத் திட்டம்: முதல்வர் தொடங்கிவைத்தார்”, என்றே செய்தி வெளியிட்டிருக்கிறது[1]. ஆக இதற்கெல்லாம் மக்களின் வரிப்பணம் தானே செலவழிக்கப் படுகிறது. சினிமாவில், வியாபாரத்தில், சாராயத்தில், கள்ளக்கடத்தல், “நம்பர்-டூ” வியாபாரம் செய்து கள்ளப்பணம் / கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தானமாக கொடுத்தால் பரவாயில்லை. கணக்கில்லாத பணம் அவ்வாறே செலவிழிகிறது என்று விட்டுவிடலாம். ஆனால், கணக்கில், வரிப்பணமாக இருக்கும் பணத்தை இலவசத்திற்கு கொடுப்பதால் அப்பொருட்கள் விலையில்லாப் பொருட்களாகி விடாது. இதனால், நிச்சயமாக வரியேற்றம் ஏற்படும், விலைவாசி ஏறும், அத்தகைய சங்கிலித்தொடர் பொருளாதார நிகழ்வுகளில் பொது மக்கள் தான் பாதிக்கப்பட போகிறார்கள்.
ஒரு கோடியே, 70 லட்சத்து, 84 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே, 69 லட்சத்து, 75 ஆயிரம் வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன: இந்த ஆண்டுக்கு, விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை, பயனாளிகளுக்கு வழங்கி, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்[2]. பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம், ஏழைகள் பயன் பெறுவது மட்டுமன்றி, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கும், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி, விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே, 70 லட்சத்து, 84 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே, 69 லட்சத்து, 75 ஆயிரம் வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இத் திட்டத்துக் கென முதல்வர் ஜெயலலிதா, 350 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். ஏழு பயனாளிகளுக்கு, வேட்டி, சேலைகளை வழங்கினார்.
விலையில்லா வேட்டி-சேலை திட்ட ஒதுக்கீடு ரூ.350 கோடியாக உயர்வு[3]: பொங்கல்-2012 விலையில்லா வேட்டி சேலை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 350 கோடி ரூபாயாக உயர்த்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகள் தயாரிப்பில் தற்போதுள்ள நிலை மற்றும் விநியோகம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா 5.1.2012 அன்று ஆய்வு மேற்கொண்டார். 1981ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தேக்கமடைந்த கைத்தறி துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு, நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்படும் நோக்கத்துடனும், கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது புத்தாடைகளை இலவசமாக வழங்கும் நோக்கத்துடனும், அகில இந்தியாவுக்கும் முன்னோடி சமூக நல திட்டமான இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டம், தமிழக அரசினால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தரமான வேட்டி சேலைகளை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதன் முறையாக பருத்தி நூலுடன் பாலியெஸ்டர் நூல் கலந்து வேட்டிகள் மற்றும் சேலைகள் உற்பத்தி செய்து வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2003ஆம் ஆண்டு ஆணையிட்டார். அதன்படியே வேட்டி, சேலைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. 256 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தின் கீழ் தேவைப்படும் 170.84 இலட்சம் சேலைகள் மற்றும் 169.75 இலட்சம் வேட்டிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். அதன்படி தமிழகத்திலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் மூலமே இந்த வேட்டி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பொங்கல்-2012 விலையில்லா வேட்டி சேலை திட்டத்துக்காக நடப்பு ஆண்டில் 256 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே ஆணை வழங்கியுள்ளார்கள். இத்திட்டத்திற்காக மேலும் தேவைப்படும் 94 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது உத்தரவிட்டுள்ளார். ஆக மொத்தம் இத்திட்டத்துக்காக 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் வேட்டி, சேலைகளுக்கான நெசவு கூலியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா 15.9.2011 அன்று ஆணையிட்டிருந்தார்கள். மேலும், இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி, சேலைகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூலி உயர்வினை கனிவுடன் பரிசீலனை செய்து வேட்டி மற்றும் சேலை ரகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நெசவு கூலியினை வேட்டி ஒன்றுக்கு ரூ. 16/-லிருந்து ரூ. 18.40 ஆகவும், சேலை ஒன்றுக்கு ரூ. 28.16/- லிருந்து ரூ. 31.68/-ஆகவும் உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். தீபாவளியானால் என்ன, பொன்fகலானால் என்ன, இலவசம், இலவசம் தான்: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 01.03.2011 முதல் 15.05.2011 முடிய தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபடியாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு 22.09.2011 முதல் 21.10.2011 முடிய தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபடியாலும், நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதிலும், இறுதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் தேவையான அளவு வேட்டி, சேலைகள் நெய்வதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும். வேட்டி மற்றும் சேலை உற்பத்தி தொடர்ந்து முனைப்புடன் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் விநியோகம் பொங்கல் பண்டிகையின் போது தொடங்கப்பட்டு, வரும் தமிழ் புத்தாண்டுக்குள் தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கி முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
[1] http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=537423&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF,%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
[2] விகடன், விலையில்லா வேட்டி-சேலை திட்ட ஒதுக்கீடு ரூ.350 கோடியாக உயர்வு, Posted Date : 12:01 (06/01/2012)Last updated : 12:01 (06/01/2012); http://www.dinamalar.com/News_Detail.asp?Id=385318