கோல்வால்கருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? – பகவத் கீதை, சங்கராச்சாரியார், வீரமணி, திராவிட கழகம் – பெரியார் திடலில் விவாதம் (3)!
வீரமணிக்கு கீதை மீது பிறந்த காதல்: வீரமணி போன்ற இந்து-விரோதத்துவம் கொண்ட நாத்திகர்களே இன்று பகவத் கீதையைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்து விட்டனர். போதாகுறைக்கு, பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில், கோல்வால்கர் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். சரி, கோல்வால்கருக்கும், திருக்குறளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்டு விவரிக்க ஆரம்பித்தது தமாஷான விசயம் தான். ஆனால், இதை முன்னமே எடுத்துக் காட்டியுள்ளார். கோல்வால்கர் திருக்குறளை பொதுநூலாக பாவித்தார், ஆனால், திராவிடத்துவவாதிகள் அதனை தமிழர் நூல், திராவிடர்களின் நூல் என்று குறுகிய நோக்கில் சுருக்கினர். குறளைப் படித்து, மற்ற இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சமஸ்கிருத இலக்கியத்துடனான நெருக்கம் தெரிந்தது[1]. இதனால், அதிலுள்ள நீதி, நேர்மை, தார்மீகக் கருத்துகள் வேத-உபநிஷ்ட நூல்களிலிருந்து பெற்றிருக்கலாம் என்று பல அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டினர்[2]. மேலும், குறள், சூத்திரங்கள் போன்று ஈரடி, ஏழு சொற்கள், சுருங்கச் சொல்லுதல் முதலிய விதிகளையும் பின்பற்றியிருப்பதை எடுத்துக் காட்டினர். இதனால், தனித்தமிழ் இயக்க தமிழ் பண்டிதர்கள் அவ்வாறில்லை என்பதனை எடுத்துக் காட்டவே திரிபு விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
திருக்குறள் மறைமுக எதிர்ப்பு தேச-விரோதமானது: இது 1960களில் ஜைனர்கள், கிருத்துவர்கள் போன்றோரை ஊக்குவித்தது. அவர்கள் குறள் தங்களது நூல் தான், வள்ளுவரும் தங்களது மதத்தவர் தான் என்று கதைகளைக் கட்டிவிட ஆரம்பித்தனர்[3]. வள்ளுவர் குந்தர்-குந்தரின் மாணவர் என்றும் அவரிடத்திலிருந்து குறளைத் திருடிச் சென்று தனது என்று அரங்கேற்றி விட்டார், இல்லை அவரே குந்த்-குந்தர் தான்[4] என்று ஜைன ஆராய்ச்சியாளர்கள் கதை கட்டினர். கிறிஸ்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதுதான் சாக்கு என்று, தாமஸ் சென்னைக்கு வந்தார், வள்ளுவரை சந்தித்தார், வள்ளுவர் அவரிடத்திலிருந்து பைபிள் கற்றுக் கொண்டு, அதன் தாக்கத்தில் தான் குறளை எழுதினார் என்று பெரிய கட்ட்டுக் கதையைக் கட்டி விட்டனர். போதாகுறைக்கு அத்தகைய போலித்தனமான கள்ள ஆராய்ச்சிகளுக்கு, அவர்களால் ஏற்படுத்தப் பட்ட பல்கலை பிரிவுகள்-சேர்களால் பட்டங்களும் கொடுக்கப்பட்டன. இதற்கெல்லாம் கருணாநிதி முதல் தமிழ்த்துறையில் உள்ள ஊழியர் வரை உதவி செய்துள்ளார்கள் என்பதனை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
பகவத் கீதை எதிர்ப்பு – ஆந்நியர் ஆட்சி முதல் திராவிட ஆட்சி வரை: பகவத் கீதையினை இந்துக்கள் ஆதரிப்பது அறிந்து, அதனை தூஷித்து ஒரு புத்தகத்தை எழுதினார். இதுவொன்றும் புதியதல்ல. ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, பகவத் கீதையை எதிர்த்து பிரச்சாரம் நடந்தது. தேசதுரோக அறிக்கை கமிட்டி அதனை தடை செய்யவும் முற்பட்டது. திலகருக்கும், காந்திக்கும் இடையிலேயே கீதை ஆதரிப்பு-எதிர்ப்பு விவாதம் நடந்தது. காந்தி உண்மையில் கீதையை ஆதரிப்பது போல காட்டிக் கொண்டு, எதிர்க்கவே செய்தார். எப்படி சைவ-வைணவ சர்ச்சை, சண்டை, எதிர்ப்புகள் இலக்கியங்களாக வெளிப்பட்டபோது, அவை மற்றவர்களால் சாதகமாக உபயோகித்துக் கொண்டார்களோ, அதேபோல இந்த விவரங்களை வைத்துக் கொண்டு, தன்னுடைய காழ்ப்பு, வெறுப்பு, துவேசம் முதலியவற்றைச் சேர்த்து இப்புத்தகத்தை வீரமணி எழுதித் தள்ளினார். போதாகுறைக்கு இதே மதத்தில் (செப்டம்பர் 2015) தான் திருப்பதியில் 9 முதல் 11 வரை “ஶ்ரீமத் பகவத் கீதை”ப் பற்றி தேசிய மாநாடு நடந்துள்ளது[5].
தருண் விஜய்யின் தமிழ்த்தொல்லை, தினமணியின் கொசுத் தொல்லை, வீரமணியின் ஓடோமாஸ் கொள்ளை: ஆகஸ்ட் 2014ல் ஆர்.எஸ்.எஸ் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றது[6]. இந்து-விரோத தளங்கள் இப்படியெல்லாம் புலம்பித் தள்ளின[7], “தருண் விஜய்யின் தமிழ்த்தொல்லையும், தினமணியின் கொசுத் தொல்லையும் நாளுக்குநாள் தாங்க முடியவில்லை. வடமாநிலங்களில் திருக்குறள் பயிற்றுவிப்பு, திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாட்டம், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வரிசையாக இந்த ஆர்.எஸ்.எஸ். நரி வைக்கும் ஊளையில் காது கிழிகிறது! திருக்குறளைத் தூக்கிக்கொண்டு காவி துடிக்க அலையும் இந்த நரி, மத்தியப் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என சமஸ்கிருதத்தை திணித்துக்கொண்டே வரும் ஸ்மிருதி ராணியுடன் சேர்ந்து ‘திருக்குறள், தமிழுக்கு ஆதரவு’ போஸ் கொடுத்தது. அடுத்த சீன், மத்திய உள்துறை ராஜ்நாத்சிங்கை சந்தித்து திருக்குறள் அறிமுகம் செய்து திருவள்ளுவர் சிலையை கைமாத்தியது. உடனே உளவுத் துறையை கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் பார்வையாளர் கண்களில் தெரியும்படி தமது அறையில் சிலையை வைக்குமாறு உத்திரவிட்டார். போதாதா? “பா.ஜ.க.வின் தமிழ்க்காதல்” பாரீர் என! தினமணி மாமா மூணு காலத்துக்கு படுத்துப் புரண்டு, பாரடா! எங்கள் பார்ப்பன சமர்த்தை என்று தொடையைத் தட்டுகிறார். திருவள்ளுவர் படத்துக்கே பூணூல் போட்டு அவர் ‘எங்களவா?’ என்று ஆள்கடத்தல் செய்த தமிழக பார்ப்பனக் கும்பலையும் தாண்டி, திருவள்ளுவர் திரும்ப வரவா போகிறார் என்ற தைரியத்தில் தருண் விஜய் சீன் போடுகிறார்”. தருண் விஜய்க்கு சாபம் கொடுத்தன, வசை பாடின[8]. அவர் தமிழ் மீது காட்டும் காதல் பொய்யானது என்றும் கூறின[9].
வீரமணியின் கீதை காதலும், தருண் விஜயின் குறள் காதலும்: தருண் விஜய்க்கு திடீரென்று திருக்குறள் பற்று வந்து, அதனை ஆதரித்து, “திருவள்ளுவர் நாள்” என்றெல்லாம் அறிவித்தவுடன், வீரமணி உஷராகி விட்டார். வீரமணியின் கீதை மீதான காதல் அலாதியானது. ஆக, இந்த இரு காதலர்களும் மறைமுகமாகத் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். வீரமணி தருணுக்கு எப்படியாவது செக் வைக்க அரும்பாடு பட்டார். இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே என்றும், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்றுவதற்கான கண்ணி வெடியாக இதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் கி.வீரமணி கூறியுள்ளார்[10].
திருவள்ளுவர் நாள் அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்ற பயன்படுத்தக் கூடாது: கி.வீரமணி: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 29.11.2014 சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் – ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயக்கப்படி – நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசின் சார்பில் திருவள்ளுவர் நாள் இந்தியா முழுவதும் மத்திய அரசால் கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இதற்கு வழி வகுக்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க., எம்.பி.யும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஹிந்தி ஏடான ‘பாஞ்சன்யா’வின் முன்னாள் ஆசிரியருமான தருண்விஜய் மக்களவையில் இப்படிப் பேசி வலியுறுத்தியதனால் அமைச்சர் அறிவிப்பதாகக் கூறியுள்ளார். திடீரென்று அவரே முடிவு செய்து அறிவித்திருக்க இயலாது; ஏற்கெனவே இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டிகளின் திட்டமாகத்தான் இது யோசிக்கப்பட்டு பிறகுதான் அறிவித்திருக்க முடியும். இதை வரவேற்கிறோம்; என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டிலும், தமிழர்கள் மத்தியில் வேரூன்றுவதற்கு இதை ஒரு தந்திர உபாயமாகவோ, “கண்ணி வெடியாகவோ” பயன்படுத்தலாம் என்றோ நினைத்துக் கொண்டு இதை தூண்டில் முயற்சியாக கருதி இறங்கக் கூடாது. நாம் இப்படி சொல்வது ஏனோ என்று சில ‘தமிழறிஞர்கள்’கூட எண்ணக் கூடும். அவர்கள் அறியாத ஒரு தகவலை நாம் இங்கே எழுதி தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.
கோல்வால்கர் திருக்குறளைப் பற்றி குறிப்பிட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் தத்துவ போதகரான கோல்வால்கர் எழுதிய ‘Bunch of Thoughts என்ற ஆங்கில நூல் ‘ஞான கங்கை’ என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. (பக்கம் 168-169). அந்நூலில் – எம் மதத்தையும் சாராத திருவள்ளுவரை – ஒரு ஹிந்துத்வாவாதிபோல் சித்தரித்து எழுதியுள்ளார். அப்பகுதி இதோ: “தற்காலத்தில் தமிழைப்பற்றி நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். தமிழ் என்பது தனக்கென வேறான கலாசாரமுடைய தனிப்பட்ட மொழி என்று கூறுகின்றனர். அவர்கள் வேதத்தில் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். திருக்குறளை அவர்களது மறையாகக் கருதுகின்றனர். திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட ஒரு பழைமையான அறநூல்தான். திருவள்ளுவ முனிவர் அதன் ஆசிரியர் ஆவார். அவரை நாம் நமது ப்ராதஸ்மரணத்தில் நினைவு கூர்கிறோம். மிகப் புகழ் பெற்ற புரட்சிவாதியான வ.வே.சு. அய்யர் திருக்குறளை (ஆங்கிலத்தில்) மொழி பெயர்த்துள்ளார்). திருக்குறளில் நாம் காண்பது என்ன? நாடெங்கும் அறிமுகமான நான்குவித வாழ்க்கை முறை (சதுர்வித புருஷார்த்தம்) அதில் விஷயமாகக் கூறப்பட்டுள்ளது. மோட்சத்தைப் பற்றிய அத்தியாயம் மட்டும் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. அது எந்தக் கடவுளையும் அல்லது எந்த வழிபாட்டு முறையையும் பின்பற்றுமாறு கூறவில்லை. மோட்சம் என்ற உயர்ந்த விஷயத்தைப் பற்றியே கூறுகின்றது. எனவே, அது எந்த ஒரு சாரரின் நூலும் அல்ல. மகாபாரதம்கூட திருக்குறள் கூறுவது போன்ற வாழ்க்கை முறைகளையே புகழ்ந்து கூறுகின்றது. ஹிந்துக்களிடம் அல்லாது மற்ற எந்த மதத்தவரிடமும் இவ்வாறான சிறந்த வாழ்க்கை முறை நோக்கு காணப்படவில்லை. எனவே, திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களைத் தூய ஹிந்து மொழியில் எடுத்துக் கூறும் ஒரு ஹிந்து நூல் ஆகும்”, என்று கோல்வால்கர் கூறியுள்ளார்.
© வேதபிரகாஷ்
20-09-2015
[1] Divine Life Society,Bhagavad Gita & Tirukkural Compendium, Divine Life Society of South Africa, 1989.
[2] M. Muthuraman, Gita and Kural, the University of Michigan, Higginbothams, 1971.
[3] http://jainology.blogspot.in/2007/11/saint-tiruvalluvar-was-jain.html
[4] Jainism is oldest organized religion in world and also it is first organized religion of Dravid culture (refer Archaeology Director in Mahal , Madurai). Thiruvalluvar( Acharya kund kund) was a Jain saint (Naked) who contributed to Tamil Civilization, Tamil Script and Tamil culture, later who was renamed as Thiruvalluvar- You don’t have to trust our claim( you can verify this fact with Dr. Skandalingam, Director of State Archaelogy, Mahal, Madurai Tamilnadu) your narrow brain will be refreshed with fresh information.
[5] https://kvramakrishnarao.wordpress.com/2015/09/12/the-importance-of-bhagavatgita-in-prasthanatraya-the-national-seminar-held-at-tirupati-from-september-9th-to-11th-2015/
[6] உச்சநீதிமன்ற நீதிபதி தவே அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என கூறியுள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், அதனை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
http://www.vikatan.com/article.php?page=2&module=news&mid=9&sid=0&aid=31029
[7] http://www.vinavu.com/2014/12/05/thirukural-and-tarun-vijay-political-trickery/
[8] http://www.vinavu.com/2014/11/11/vairamuthu-selling-out-to-bjp-tarun-vijay/
[9] புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014; http://www.vinavu.com/2014/10/29/tarun-vijay-love-of-tamil-is-fake/
[10] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=133291
நக்கீரன், திருவள்ளுவர் நாள் அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்ற பயன்படுத்தக் கூடாது: கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 29, நவம்பர் 2014 (17:43 IST) ;மாற்றம் செய்த நாள் :29, நவம்பர் 2014 (17:43 IST).