சாமானியர் காமராஜா, கருணாநிதியா?

சென்னையில் வியாழக்கிழமை காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. கோஷ்டிகளுக்குப் பெயர்போன காங்கிரஸில் ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு ஆகிய மூவரும் ஒரே மேடையில் காட்சி தந்ததே அதற்கு காரணம்.பெரம்பூர் ராகவன் தெருவில் காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதில் வாசன், இளங்கோவன், தங்கபாலு என மும்மூர்த்திகளும் அவர்தம் கோஷ்டிகளும் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் இளங்கோவன் பேசியதுதான் கூட்டத்தின் ஹைலைட்டாக இருந்தது.
“சாமானியனாகப் பிறந்து சாமானியனாகவே மறைந்தவர் காமராஜர். ஆனால், சாமானியனாகப் பிறந்து குபேரனாக வாழந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் காமராஜரோடு தங்களை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். நாங்களும் காமராஜர் ஆட்சி தான் நடத்துகிறோம் என்கிறார்கள். ஆனால் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தால் சிறையில் தள்ளுகிறார்கள். 43 ஆண்டுகாலமாக மற்றவர்களின் வெற்றிக்காக உழைக்கிறோம். இதற்கு விடிவு காலம் எப்போது? நாம் கூட்டணி கட்சியின் தேசியப் பிரிவாக இயங்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதானா?” என்று அவர் பேசியபோது கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது.
எல்லாவற்றையும் பேசிவிட்டு, “இப்படி கைதட்டி கைதட்டி என்னை பிரச்னையில் மாட்டி விட்டு விடாதீர்கள்’ என்று கூறி கூட்டத்தினரைக் கலகலப்பாக்கினார் அவர்.